நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 03, 2017

வளனே வாழி காவேரி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..

அந்த உழவுக்கும் தலையாயது நீர்..

இன்று நீர்ப் பெருக்கு நாள்..

நறும்புனல் காவிரி (பழைய படம்)
ஆடிப் பதினெட்டு எனும் திருநாள்..

சோழ மண்டலத்தின் நதிக்கரைகளில்
புது வெள்ளத்துடன் கோலாகலமும் பொங்க வேண்டிய நன்னாள்..

ஆனால் -

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவிரியாள் - உலர்ந்து கிடக்கின்றாள்..

நெடுங்கரைகளை எல்லாம் நீள்மணிக் கரங்களால்
தழுவிச் சென்றதெல்லாம் ஒருகாலத்தில் என்றாயிற்று..

பாசத்துடன் நோக்குபவர் தம் கண்களில் நீர் வரச் செய்கின்றாள் - காவிரி..

காவிரியைத் தாயாக மகளாகக் கண்டு மகிழ்ந்த நெஞ்சங்கள்
இன்றைக்குக் கலங்கித் தவிக்கின்றன.. கண்ணீரில் குளிக்கின்றன...

ஆனாலும், ஆடிப்பெருக்கு நாளாகிய இன்று
நதிக்கரையின் படித்துறைகளை 
சுத்தம் செய்து மங்கல மரபுகளை இயற்றுகின்றனர் - மக்கள்..

நிச்சயம் காவிரி வருவாள்!.. - என்று..


சில ஆண்டுகளுக்கு முன்..
அவள் வருவாள்.. 
அன்பின் நெஞ்சங்களைத் தேடி வருவாள்..
ஆயிரம் ஆயிரம் நன்மைகளை வாரித் தருவாள்..

தாய் மனம் கொண்டு அழைத்து நிற்கையில்
அவள் வாராதிருக்க வழக்கும் உண்டோ!..

வருக காவேரி.. வருக..
வளம் பெருக நலம் பெருக
நறும் புனலாய் வருக வருக!..
***


உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!..
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி!..
***


மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடையது போர்த்துக்
கருங்க யல்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி!..
கருங்க யல்கண் விழித்தொல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!..

பூவார் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி!..
காமர்மாலை அருகசைய
நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே
அறிந்தேன் வாழி காவேரி!..

வாழி அவன் தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி!..
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன்
அருளே வாழி காவேரி!..
(கானல் வரி - புகார்க் காண்டம்)
- சிலப்பதிகாரம் - 
***


வருக காவிரி.. வருக..
வளர் நலம் பெருகிட வருக..
வருக காவிரி.. வருக..
நல்லறம் பொங்கிட வருக..

வருக காவிரி.. வருக..
குன்றா வனப்புடன் வருக!..
வருக காவிரி.. வருக..
குவலயம் காத்திட வருக!..
***

18 கருத்துகள்:

  1. அன்பின் ஜி மீண்டும் வருவாள் காவேரி நம்பிக்கை கொள்வோம்.

    புகைப்படங்கள் எவ்வளவு அழகு நமது சந்ததிகளுக்கு மீண்டும் நிஜம் காணக்கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அடுத்த தலைமுறைக்கு காவிரி என்பது கனவாகப் போய்விடக் கூடாது.. ஆனாலும் அதற்கான வேலைகள் தான் நடக்கின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்களை பார்த்தாவது மகிழ்ந்து கொள்வோம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      படங்களப் பார்த்து மகிழ்ந்து கொள்வோம்..
      இப்போதைக்கு வேறுவழியில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வருக காவிரி வருக!
    நலம் பெருக வருக!
    அருமையான செய்தி, அழகான படங்கள், பக்தி பரவசத்திற்கு பாடல்கள்.
    சிறப்பு பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இன்றைய காவிரி வருத்தத்தை அல்லவா வாரி வழங்குகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இதற்கெல்லாம் யார் காரணம்?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. படங்களில் மட்டுமே பார்க்க வேண்டும் நிலை வருத்தம் தரும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      வற்ண்டு கிடக்கும் ஆறுகளைப் பார்க்கவே வருத்தமாக இருக்கின்றது..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  7. சில வருடங்கள் காய்ந்தால் சில வருடங்கள் பெய்யெனப் பெய்ய வேண்டும். வருக தாயே.. அருள் தருக.. காய்ந்து கிடைக்கும் இடங்களை இன்னமும் நாங்கள் நம்பிக்கையுடன் ஆறு என்றுதான் அழைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நம்பிக்கை என்றும் வீணாகாது.. பெய்யெனப் பெய்யும் மழை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. இன்னும் சில வருடங்களில் ஆடிப்பெருக்கும் பிறரது அனுபவமாகவே மாறும் என்று தோன்று கிறது 1966ல் ஆடிப்பெருக்குக்கு அம்மா மண்டபத்துக்கு குதிரை வண்டியில் போன ஞாபகம் வருதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      பருவம் தவறாத மழை என்றால் ஆற்றில் தண்ணீர் கரைபுரளும்.. தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான படங்கள்! அதுவும் கரை புரண்டு ஓடும் காவிரியைப் பார்க்கும் போது!ஆஹா! இப்போதோ?!! இந்த நிலை மாறித்தானே ஆகும்! மாற வேண்டும்! மழை கொட்ட வேண்டும். வரைபடத்தில் இருக்கும் ஆறுகள் எல்லாம் பெருக வேண்டும்! பிரார்த்திப்போம்.! மழை பெய்யும்!

    வெர்ச்சுவல் ஆடிப் பெருக்கு என்று எதிர்காலத்தில் வந்திடாமல் இருக்க அந்த அன்னை அருள் பொழியட்டும்...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      பருவம் தவறாத மழை என்றால் ஆற்றில் தண்ணீர் கரைபுரளும்..
      ஆறுகள் கரைபுரள வேண்டும்.. வேண்டிக் கொள்வோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..