நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 01, 2017

ஸ்ரீ ராமானுஜர்

ஓம் நமோ நாராயணாய!..

அஷ்டாங்க விமான தளத்திலிருந்து கேட்கின்றது அந்தப் பெருங்குரல்!..

ஆங்காங்கும் பற்பல வேலைகளைச் செய்து கொண்டிருந்த
உழைப்பாளிகளும் பாமர மக்களும் திடுக்கிட்டனர்..

தேஜோ மயமான துறவி ஒருவரை 
அஷ்டாங்க விமானத்தின் அருகில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..


ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் திருக்கோயிலின் 
முன்பாகக் கூடி -  விமான தளத்தினை வியப்புடன் நோக்கினர்..

இதோ மீண்டும்...

ஓம் நமோ நாராயணாய!..

யார் இவர்!.. எப்படி மேலேறிச் சென்றார்?..

ஸ்ரீ ராமானுஜர் முழங்கிய திருக்கோஷ்டியூர் விமானம்
இதோ மீண்டும் மூன்றாவது முறையாக - 

ஓம் நமோ நாராயணாய!..

கதிரவனால் கவரப்பட்ட கமல மலராக 
கீழே திரண்டிருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம்!..

அவர்களை அறியாமல் ஆனந்தப் பெருக்குடன் முழங்கினர்..

ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..

மேலே நின்று முழங்கிய துறவியின் கண்களிலிருந்து நீர்த் துளிகள்
திரண்டு வழிந்து அஷ்டாங்க விமானத்தின் மீது விழுந்தன...

புண்ணிய பூமியாகிய திருக்கோஷ்டியூர்...

பரமானந்த அலைகளினூடே தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில்
திருக்கோயிலின் எதிரே இருந்த இல்லத்தின் கதவுகள் வேகமாகத் திறந்து கொண்டன..

அவ்வீட்டினுள்ளிருந்து சிவந்த கண்களுடன் வெளிப்பட்டவர் - திருக்கோஷ்டியூர் நம்பி..

தன் வீட்டின் எதிரே விளங்கும்
சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முன்பாக 
ஆயிரக் கணக்கில் ஏழை எளியோர்.. ஏதும் அறியாப் பாமரர்...

ஆயிரம் ஆயிரமாக கூப்பிய கரங்களுடன் கசிந்துரும் நெஞ்சங்கள்.. 

அண்ணாந்து நோக்கிய வண்ணம் கலங்கித் ததும்பும் கண்கள்!..

இதோ எம்மையும் கரைடேற்ற ஒருவர் வந்து விட்டார்!... 

- என, சொல்லாமற் சொல்லின...

எல்லாவற்றையும் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி சினம் கொண்டார்..

இதன் பொருட்டோ நீ பதினெட்டு முறை எமது திருவாசலுக்கு வந்தனை?..
இதன் பொருட்டோ யாம் உனக்கு மகாமந்த்ரத்தை உபதேசித்தோம்?..
இந்த மகாமந்த்ரம் முக்தி தரவல்லது.. புனிதமானது.. ரஹஸ்யமானது.. 
சாமான்யர் எவர்க்கும் உபதேசித்தல் ஆகாது!.. - என, கூறியிருந்தோம்..

நீயும் எமக்கு ரஹஸ்யம் காப்பதாக பிரமாணம் செய்திருந்தாய்..
ஆயினும், எமக்கு அளித்த வாக்குறுதியினை மறந்து 
நீ பிழை புரிந்ததனால் கொடுநரகில் கிடந்து உழல்வாயாக!..

அங்கே அஷ்டாங்க விமானத்தின் அருகே -
நின்று கொண்டிருந்த இளந்துறவியை நோக்கிக் கூவினார்..

ஸ்வாமி!.. தாங்கள் அடியேனைப் பொறுத்தருளல் வேண்டும்!... 

நாராயண மந்த்ரத்தின் துணை கொண்டு நானொருவன் மட்டும் 
வைகுந்தம் புகுதல் சரியோ?.. அது நீதியோ?...

கரையேற்றுவாரின்றிக் கிடந்துழலும் இம்மக்கள் அனைவரும் 
வைகுந்தம் செல்லும் பேறு எய்துதல் வேண்டாமோ!..

மகாமந்த்ரத்தினை உச்சரித்த இவ்வளவு பேரும் 
வைகுந்தத்திற்கு ஏகுவார்கள் எனும்போது
எளியேன் நரகிற் புகுந்தாலும் பாதகமில்லை!...

எளியேனைத் தாங்கள் மீண்டும் பொறுத்தருளல் வேண்டும்!...

அஷ்டாங்க விமானத்திலிருந்து எழுந்த இனிய குரல் காற்றலைகளில் தவழ்ந்தது..

அந்த மாத்திரத்தில் கீழே நின்று கொண்டிருந்த 
மக்கள் அனைவரும் தம்மை மறந்து ஆரவாரித்தனர்...

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் கண்கள் பனித்தன..

என்ன தவம் செய்தனை மனமே!.. இத்திருமகனை மாணாக்கனாகப் பெறுதற்கு!.. - என, அவருள்ளம் பேருவகை கொண்டது..

அதற்குள்ளாக -  அஷ்டாங்க விமானத்திலிருந்து அந்த இளந்துறவி கீழே இறங்கி ஏழை எளிய மக்களுடன் கலந்திருந்தார்..

தமது ஆச்சார்யராகிய திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களை நெருங்கிப் பணிந்து நின்றார்..

இராமானுஜனே!.. நீ என்னிலும் பெரியவன்!.. எம்பெருமான்!.. 

தனது மாணாக்கனை ஆனந்தப் பெருக்குடன் கட்டித் தழுவிக் கொண்டார் - திருக்கோஷ்டியூர் நம்பி...
  

ஸ்ரீ இராமானுஜர்..

உடையவராகிய எம்பெருமானார்..
ஏழை எளியோர்தம் நல்வாழ்விற்காக
இரங்கியருளிய உத்தமர்!..

உடையவர் ஸ்ரீ ராமானுஜர் இப்பூலகில் தோன்றி ஆயிரம் ஆண்டுகளாகின்றன..

ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பது ஐதீகம்.

அப்போது கலியுகம் 4119.. சாலிவாகன சக ஆண்டு 939 (கி.பி. 1017)..

பிங்கள வருடம் சித்திரை மாதம் பதின்மூன்றாம் நாள்..
வியாழக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதி..
திருவாதிரை திருநட்சத்திரத்தில், கடக லக்னத்தில்
ஆசூரி கேசவ சோமாஜி பட்டர் - காந்திமதி தம்பதியரின் திருக்குமரனாக வந்துதித்தார்..

தற்போது ஸ்ரீபெரும்புதூர் என்றழைக்கப்படும் 
ஸ்ரீபெரும்பூதூர் தான் உடையவரின் அவதாரத் திருத்தலம்..

அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூரின் திருப்பெயர் - ஸ்ரீ பூதபுரி என்பதாகும்..

120 ஆண்டுகள் இப்பூலகில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்..

வாழும் காலத்திலேயே ஜாதி பேதங்களைக் கடந்த நிலையைக் காட்டியவர்..

சமயத்திலும் சமூகத்திலும் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்..

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் அன்பு காட்டினார்..

அவர்களைத் திருக்குலத்தார் என்றழைத்துப் பெரும் புரட்சி செய்தவர்...

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணை கொண்டு அவர்களைத்
தம்முடன் அரவணைத்துக் கொண்ட உத்தமர்...

ஸ்ரீ ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் - ஒடுக்கப்பட்ட மக்களைத் தாழ்வாகக் கருதும் மனோநிலையில் இருந்து மீளாதிருந்தார்..

அதுவே ஸ்ரீ ராமானுஜர் துறவு கொள்வதற்குக் காரணமாயிற்று..

எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்தவர் ஸ்ரீ ராமானுஜர்...


நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்றுவந்து இவைகொள்ளுங்கொலோ..(89)
-: நாச்சியார் திருமொழி:-

அன்றைக்கு நேர்ந்து கொண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

ஆனால், அவள் வேண்டிக் கொண்டபடி அவளுக்குக் கைகூடவில்லை..

திருமாலிருஞ்சோலைக்கு உடையவர் தரிசனம் காண வந்தபோது ஆண்டாளின் நேர்ச்சை நினைவுக்கு வந்தது..

அழகர்கோயிலில் கள்ளழகருக்கு முன்பாக சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் நேர்த்திக் கடனை நிறைவேற்றியருளினார்...

அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உடையவர் எழுந்தருளியபோது,
திருமூலத்தானத்தின் உள்ளிருந்து -

வாரும் எம் அண்ணாவே!..

- என்றழைத்தவாறு எதிர் நின்று வரவேற்று மகிழ்ந்தாள் - கோதை நாச்சியார்...

நிலமகளாகிய கோதை நாச்சியாருக்கு 
ஆதிசேஷனாகிய உடையவர் - அண்ணன் ஆகினார்!..
- என்றால் மேனி சிலிர்க்கின்றது..

ஸ்ரீ ராமானுஜர் - திருநாராயணபுரம், மேல்கோட்டை
திருநாராயணபுரம்

ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில்
ஸ்ரீ ராமானுஜர் தான் உகந்த திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் வருடந்தோறும் சித்திரைத் திருஆதிரையை அனுசரித்து ஸ்ரீ ராமானுஜருக்குத் திருவிழா நிகழ்கின்றது..

ஆயிரமாவது ஆண்டு திருஅவதாரப் பெருவிழா -
கடந்த ஏப்ரல் 21 முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

ஸ்ரீ பெரும்பூதூர்
ஸ்ரீ பெரும்பூதூர்
ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமானுஜர் உற்சவத் திருமேனி திருமஞ்சனம் கண்டருளிய பின் -

தங்கப்பல்லக்கு, மங்களகிரி, யாளி, சிம்மம், அன்னம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, சேஷம், யானை என வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறுகின்றது..

இன்று திங்கட்கிழமை திருவாதிரை (1/5) உடையவரது ஜயந்தி நாள் சிறப்புற அங்கே கொண்டாடப்படுகின்றது..

நாளை முதல் நான்கு நாட்களுக்குத் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது..

ஆழ்வார் திருநகரி
உடையவரை ஆராதித்து வணங்குவோர்க்கு அவர் தம் நல்லாசிகளினால் சகல பாவங்களும் குற்றங்களும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு..

பரிபூரணமான பக்தி சரணாகதி இவையிரண்டும் தான் இறைவனை அடைவதற்கான எளிய வழிகள் - என, உபதேசித்தருளியவர் ஸ்ரீ ராமானுஜர்..

திருஅரங்கத்தில் இருந்தபோது திருக்கோயிலில் நடத்தப்பெறும் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்தார்.. 

அந்த நடைமுறைகளே இன்றளவும் பின்பற்றப்படுகின்றன..

ஸ்ரீ ரங்கநாதனும் ஸ்ரீ ராமானுஜரும் - திருஅரங்கம்..
திருவரங்கத்தில் தானான திருமேனியாக 
ஸ்ரீ பெரும்பூதூரில் தானுகந்த திருமேனியாக  
திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியாக
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் அருளாட்சி செய்கின்றார்.. 

திருப்பதி
சக மனிதரை மதித்து ஆதரித்து அரவணைப்பவர் அனைவரும்
உடையவரின் அன்புக்குரியவர்களே!..

மனுக்குலம் மேம்படுவதற்கான நல்வழியைக் காட்டியவர்
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்..

அன்னவர் தம் நல்வழியில் பயணித்து
பரமனின் நல்லருளைப் பெறுவோமாக..

உடையவராகிய 
ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே போற்றி..

ஓம் நமோ நாராயணாய..
***

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஸ்ரீ இராமானுஜர் பற்றிய அறிய விடயங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ராமாநுஜர் என்றதும் சில வழிபாட்டு முறைகள் நினைவுக்கு வருகிறது திருக்குலத்தார் என்று சொன்னதும் காந்திஜி சொல்லி இருந்த ஹரிஜன் எனும் வார்த்தை நினைவுக்கு வருகிறது அப்படிக் கூறுவதை மக்கள் ஏற்கவில்லை என்றும் படித்த நினைவு

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான பகிர்வு ஐயா .. ஆழமாக அப்படியே மனதில் பதிந்து விட்டது இராமானுஜர் அவர்களின் அன்புள்ளமும் செய்திகளும் .மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. இராமானுஜர் பற்றி படிக்கும் போது எல்லாம் கண்ணில் நீர் ததும்பும், இன்றும் தங்கள் பதிவு படித்த போது அப்படித்தான் ஆனது.
    அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
    ஓம் நமோ நாராயாணாய

    பதிலளிநீக்கு
  5. இராமானுஜர் பற்றிய தகவல்கள் அவரது வாழ்க்கைக் கதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்களின் எழுத்து நடையில் மீண்டும் வாசித்தது இனிமை...

    அருமை!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு....சுவாமியை பற்றி படிக்க படிக்க ஆனந்தமே..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..