நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 09, 2017

செந்தூரில் ஒருநாள் 1

திருச்சீரலைவாய் என்னும் புகழுடைய செந்திற்பதியில்
மாசிப்பெருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..


மார்ச் முதல் நாளன்று அதிகாலை ஒரு மணியளவி திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம்.. அதன்பின் இரண்டு மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேக தரிசனம்.. 

காலை 6 மணியளவில் சம்பிரதாய சடங்குகளின்படி திருக்கோயிலில் கொடியேற்றமானது..

மாலையில் அப்பர் ஸ்வாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருள உழவாரப் பணி நிகழ்ந்தது.. இரவு ஸ்ரீ பலி நாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் திருவீதி எழுந்தருளினர்..

ஐந்தாம் திருநாளன்று மேலக்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நிகழ அன்றிரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது..

ஆறாம் திருநாளன்று காலையில் கோரதத்திலும் இரவில் வெள்ளி ரதத்திலும் திருவீதியுலா நடைபெற்றது..

ஏழாம் திருநாளன்று உருகுசட்ட சேவை.. வெட்டிவேர் சப்பரத்தில் செந்திலாதிபன் எழுந்தருள கட்டளை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நிகழ்ந்தது...

ஏழாம் திருநாளின் மாலைப் பொழுதில் ஷண்முக நாதன் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருவீதி எழுந்தருளினன்..


எட்டாம் திருநாளாகிய நேற்று அதிகாலையில் வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி திருவீதி எழுந்தருளிய எம்பெருமான்
மதிய வேளையில் பச்சைக் கால் சப்பரத்தில் பச்சை சாத்தி திருவீதி எழுந்தருளினன்..






இன்று தங்கக் கயிலாய வாகனத்தில் கந்தவேள் எழுந்தருள வெள்ளிக் கமல வாகனத்தில் தேவியர் எழுந்தருளுகின்றனர்..

நாளை வெள்ளிக் கிழமை காலையில் பெருந்தேரோட்டம்..

சனிக்கிழமை மாசி மகத்தன்று பதினோறாம் திருநாள்..
அன்றைய தினம் இரவு தெப்பத் திருவிழா..

பன்னிரண்டாம் திருநாளன்று மங்கலநீராட்டு..
மாசித் திருவிழா இனிதே நிறைவுறுகின்றது...

புகழ்மிகும் செந்தூரில் நிகழ்ந்த திருவிளையாடல் ஒன்றினை
இன்றைய பதிவினில் காண்போம்..


சீர்மிகு திருவிழாக்கள் மலிந்திருக்கும் திருச்செந்தூரின் புகழ் பாடும் நூல்கள் பற்பல..

அவற்றுள் தலையாயது - திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்..

பிள்ளைத் தமிழ் என்பது - இறைவனையோ இறைவியையோ குழந்தையாக உருவகம் செய்து பாடுவது. இது இறைவனைப் பாடும்போது ஆண்பாற் பிள்ளைத் தமிழ் எனவும், இறைவியைப் பாடும்போது பெண்பாற் பிள்ளைத் தமிழ் எனவும் வழங்கப்படும்.

குழந்தையின் வளர்ச்சி காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் பாடுவது மரபு. இது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று.

மக்களில் சிறந்தோரையும் பிள்ளைத்தமிழ் நூலில் பாடுவது உண்டு.

பிள்ளைத்தமிழ் நூல்கள் பல இருப்பினும் இன்றளவும் மிகச்சிறப்பாக விளங்குபவை -

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்..
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்..

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் குமரகுருபரர்..

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் பகழிக்கூத்தர்..

பகழிக்கூத்தர் - வைணவ அந்தண குலத்தில் பிறந்தவர்.

இராமநாதபுரத்தில் சதுர்வேதமங்கலம் என்று குறிக்கப்பட்ட சன்னாசி எனும் ஊரைச் சேர்ந்தவர். 

தமிழ் மொழியினைப் பழுதறக் கற்றவர். வடமொழியும் அறிந்தவர். 

கால சூழ்நிலையால் இவருக்கு வயிற்றில் தீராத வேதனை ஏற்பட்டுவிட்டது. 

பல  வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும் வேதனை அதிகரித்ததே அன்றி நோய் தீர்ந்தபாடில்லை. 

இந்நோய் தீராதோ?.. - என, ஒவ்வொரு நாளும் துடித்தார்... துவண்டார்..

ஒருநாள் வேதனையுடன் துயின்றவர் - தம் கனவில், 

அழகே வடிவான இளங்குமரன் ஒருவன் திருநீற்றினை வழங்கியதோடு 
பனைஓலை ஒன்றினையும் தருவதாகக் கண்டார். 

திடுக்கிட்டு விழித்தெழுந்தார். 

கையில் உண்மையாகவே பனைஓலை ஒன்று இருக்கக் கண்டு அதிசயித்தார். 

தமிழ் அறிந்த நெஞ்சினராகிய பகழிக்கூத்தர் திருக்குறிப்பினை உணர்ந்தார். 

பொழுது விடிந்ததும் பெற்றவரிடம் இதனை விவரித்தார்.

சைவமும் வைணவமும் பெரும்பூசல் கொண்டிருந்த காலம் - அது!.. 

மகனின் வேதனை தீர்ந்தால் சரி!.. - என, பெற்றவர்கள் - விரும்பினர்

ஆனாலும், அருகிருந்த மற்றவர் ஒத்துக் கொள்ளவில்லை...

அதனைப் பொருட்படுத்தாத பகழிக்கூத்தர் - அன்னை தந்தையரை வணங்கிய பின் - திருச்செந்தூரை நோக்கிப் புறப்பட்டார்..

மாயோன் மருகனே!.. மன்றாடி மைந்தனே!. - என்று தியானித்தபடி முருகனை நோக்கி விரைந்தார். 

திருச்செந்தூரை நெருங்க நெருங்க - நோயின் கொடுமை குறைவதைப் போலிருந்தது.

அலைகடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடினர்.. 

சம்பிரதாயமாக வைணவ கலைகளைத் தரித்துக் கொண்டார்..

கீழ்வானில் - ஆதவன் உதயமாகிக் கொண்டிருந்தான்..

அதே வேளையில் - திருக்கோயிலில் உதய மார்த்தாண்ட பூஜைக்கான மணியும் ஓங்கி ஒலித்தது..

முருகா... முத்துக்குமரா!.. என்று மொழிந்தபடி திருக்கோயிலினுள் சென்றார். 

நெடுங்கிடையாய் விழுந்து சேவித்தார்.  எழுந்தார். 

தமிழில் பெரும்புலமை பெற்றிருந்த அவர் - முருகனைக் குழந்தையாகக் கொண்டு பிள்ளைத் தமிழைப் பாடத் தொடங்கினார். 

வங்கக்கடல் என சங்கத்தமிழ் - திருக்கோயிலினுள் பொங்கியது.  

அதேசமயத்தில் - அலைகடல்   போல அவருக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த சூலைநோய் அடங்கி அழிந்தொழிந்தது.

முருகனைக் கண்ணாரக் கண்டு தரிசித்தார்..

சந்நிதியில் பன்னீர் இலையில் வைத்து திருநீறு வழங்கினர்.

எம்பெருமானே!... - என்று திருநீற்றினைத் தரித்துக் கொண்டார்..

அகமும் புறமும் குளிர அளவிலா  ஆனந்தத்துடன் சந்நிதியை வலஞ்செய்து வணங்கினார்..

திருச்சுற்றின் வடபுறம் அனந்த சயனம் கொண்டு விளங்கும் 
ஸ்ரீ ஹரி பரந்தாமனையும் கண்ணாரக் கண்டு வணங்கினார்...

திருச்சுற்றில் மடைப்பள்ளி அருகே - 
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை 
- என, நிவேத்தியங்களை வழங்கிக் கொண்டிருந்தனர்..

மகிழ்வுடன் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட பகழிக் கூத்தர் -
வழி நடைக் களைப்பு தீரும்படி ஆங்கிருந்த மேடையில் சற்று அமர்ந்தார்..


செந்தூரிலேயே சில தினங்களுக்கு தங்கியிருக்க வேண்டும்!.. - எனத் தோன்றியது - அவருக்கு..

கந்தவேளைச் சிந்தித்த வண்ணம் கடற்கரை மணலில் நடந்தார்..

திருக்கோயிலினுள் பிள்ளைத் தமிழ் பாடியபோது
அங்கே குழுமியிருந்த எவரும் இவரையோ -
இவர் பாடிய தமிழையோ கருத்தில் கொள்ளவில்லை...

தன்னைப் பிறர் கண்டு கொள்ள வேண்டும் என்று இவர் கருதவும் இல்லை. 

ஆனால்,

எல்லாவற்றுக்கும் காரணகர்த்தனான கந்தவேள் -
கண்டு கொண்டான்...   கருணை கொண்டான்.. கருத்தில் கொண்டான்!.. 

விளைவு?...

அடுத்த பதிவினில்!..

வேலும் மயிலும் துணை!..
***

14 கருத்துகள்:

  1. தெளிவான புகைப்படங்கள் தரிசனம் பெற வைத்தமைக்கு நன்றி ஜி
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான புகைப்படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. முருகனே செந்தில் முருகனே மாயன் மருகனே..உன் விழாபற்றிய ஒரு நல்ல பதிவை தஞ்சையம்பதியில் காண்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை... விளக்கமும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான படங்கள். தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நானும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கந்தவேள் கண்டு கொண்டால் பின் யார் காண வேண்டும்?
    அருமையான படங்கள் திருவிழா கண்ட மகிழ்ச்சியை தந்தது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நம்மைக் காண்பவன் அவன் ஒருவன் மட்டுமே!..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..