நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 12, 2017

மார்கழிப் பூக்கள் 28

தமிழமுதம்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு..(994) 
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- ஈயாமை -

துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்றீகலான்
வைத்துக் கழியும் மடவோனை வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்..(273)  
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


நின்றதோர் பாதம் நிலம் புடைப்ப நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம் அன்று
கருமாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு..(2242) 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

சிற்றுயிர்கள் வழிபட்ட 
திருத்தலங்கள்

சக்ரவாகப் பறவை வழிபட்ட திருத்தலம்

திருசக்கரப்பள்ளி
(சக்கராப்பள்ளி)



இறைவன் - ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு தேவநாயகி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - வில்வம்

ஸ்ரீ தேவநாயகி
பழங்குறிப்புகளில் மட்டுமே காணப்படும் 
உயிரினங்களுள் சக்கரவாகமும் ஒன்று..

பூமிக்கு வராமல்
வானவெளியிலேயே சஞ்சரித்து வாழ்ந்து முடியும்
அபூர்வ பறவை சக்கரவாகம்..

சக்கரவாகப் பறவை சகோரம் எனவும்
குறிக்கப்படுகின்றது..

அபூர்வ பறவையாகிய சக்கரவாகம்
பூமிக்கு வந்து சிவவழிபாடு செய்த
அபூர்வ திருத்தலம் தான் சக்கராப்பள்ளி..

 சக்ராயுதம் வேண்டி ஸ்ரீ ஹரிபரந்தாமன்
இத்தலத்தில் வழிபட்டிருக்கின்றனர்..

சப்த கன்னியருள்
பிராம்மி இங்கே வழிபட்டிருக்கின்றனள்..



சிறப்புமிக்க
இத்திருக்கோயிலின் இன்றைய நிலை?..

சொல்லுதற்கொணாதது...

திருக்கோயிலைச் சுற்றி வீடுகளே இல்லாமல்
வயல்வெளியாக இருக்கும் தலம் - திருந்துதேவன் குடி..


திருக்கோயிலைச் சுற்றி 
வீடுகள் இருந்தும் அவற்றுள்
சைவ - வைணவ இல்லம் ஏதொன்றும் 
இல்லாதிருக்கும் தலம் - சக்கராப்பள்ளி..

அது மட்டுமில்லாமல்
திருக்கோயிலுக்கு அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும்
இறைச்சிக் கடைகளைக் காணலாம்..

இந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம் கூட
மில்லத் நகர் என்று தான் இருக்கின்றது..

சக்ரவாகேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் 
வழியைக் காட்டி பெருந்தூண் வளைவு
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..

திருவையாற்றில் நிகழும் சப்தஸ்தானத்தைப் போல
சக்கராப்பள்ளியிலும் ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாக
நடந்திருக்கின்றது...

திரண்டிருந்த சொத்துக்கள் பலவகையிலும் 
கொள்ளையடிக்கப்பட்டு
கோயில் இருளடைந்த நிலையில் 
ஒரு கால பூஜைக்கே சிரமப்பட்ட காலகட்டத்தில் 
நல்ல உள்ளங்கொண்டோர் பலரும் கூடி முயன்று
கோயிலைப் புனரமைத்திருக்கின்றார்கள்..

இப்போது
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி 
திருக்கோயிலின் உபகோயிலாக நிர்வகிக்கப்படுகின்றது..

அன்பர்களின் பெருமுயற்சியால்
கடந்த பத்தாண்டுகளாக
மீண்டும் சப்தஸ்தானப் பெருவிழா நடத்தப்படுகின்றது..

இருந்தாலும் திருவிழாவினை 
நடத்துவதற்கான கெடுபிடிகள் கடுமையானவை...

கெடுபிடிகளின் கடுமையினால்
சப்தஸ்தான பல்லக்கை நெடுஞ்சாலையிலேயே
இறக்கி வைத்து விட்டு செல்லும்படியாக
ஆகியிருக்கின்றது...

தஞ்சை - குடந்தை நெடுஞ்சாலையின்
போக்குவரத்தைக் காரணம் காட்டி
பல்லக்குகளை நிற்க விடமாட்டார்கள்..

திருவிழாவினை பக்தர்கள் 
நிம்மதியாக மகிழ்ச்சியாக தரிசிக்கவும் இயலாது...

ஆயினும், கடந்த சிலவருடங்களாக
மாற்று வழியாக
திருவையாறு கபிஸ்தலம் சாலையில்
போக்குவரத்து சிலமணி நேரங்களுக்குத்
திருப்பிவிடப்படுகின்றது..




செம்பியன் மாதேவியாரின் திருப்பணி
தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்டது..

தஞ்சை நகர பேருந்து நிலயத்திலிருந்து 
அதிகமான பேருந்துகள் இயங்குகின்றன..

ஐயம்பேட்டை ராஜகிரி எனும்
ஊர்களுக்குள் ஊராக
நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே உள்ளது..

சக்கராப்பள்ளி நிறுத்தத்தில் இறங்கி எதிர்புறம்
சற்று தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்..


பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
தாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே!..(3/27) 
- ஞானசம்பந்தப் பெருமான் -

காலையில் 7 மணி முதல் 9 மணிவரை
மாலையில் 4.30 முதல் 7 மணி வரையிலுமே
கோயில் திறக்கப்பட்டிருக்கும்..

அப்பர் பெருமானின் திருவாக்கில் 
இடம் பெற்றிருக்கின்றது - இத்தலம்...

ஞானசம்பந்தப் பெருமான் 
சக்கரப் பள்ளியைத் தரிசித்து
திருப்பதிகம் அருளியுள்ளார்..

ஸ்ரீ திருஞானசம்பந்தர்
அருளிய திருக்கடைக்காப்பு

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றைத்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே!..(3/27) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை - திருப்பொன்னூசல்

ஸ்ரீ கும்பேஸ்வரர்
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியாநாண் மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாளிணைப் பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ மங்களாம்பிகை - திருக்குடந்தை

ஸ்ரீ மங்களாம்பிகை
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதுஅன்னமாம்
கயிலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே!..(99)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. தலத்தின் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தலப்பெருமை அறிந்தோம். அறியாத தகவல்கள்! படங்கள் அருமை! தங்களின் தமிழும் விளையாடுகிறது!!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கோவிலின் இன்றைய நிலை மனதுக்குக் கஷ்டத்தினை தருகிறது.....

    தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. //கறவைகள் பின்சென்று// அதைத்தானே தொலைத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா.
    தமிழர்த் திருநாள் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..