நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 11, 2015

ஸ்ரீ ராகவேந்திரர்

ஆதிகாலம் தொட்டு - எத்தனை எத்தனையோ அருளாளர்கள் நம் பொருட்டு திரு அவதாரம் செய்திருக்கின்றனர்.

அவர்களால் தான் - இந்தப் பூமி புண்ணிய பூமியாக பொலிகின்றது..

அத்தகைய அருளாளர்கள் ஒருவர் - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்.

கலியுகத்தில் ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்பல!..

தில்லைத் திருச்சிற்றம்பலம் எனச் சிறப்பிக்கப்படுவது - சிதம்பரம்.

இந்நகருக்கு அருகிலுள்ளது புவனகிரி.

புவனகிரியில் வாழ்ந்தவர்கள் திம்மண்ணபட்டர் - கோபிகாம்பாள் என்னும் தம்பதியர்.

அவர்கள் செய்த அருந்தவத்தின்  பயனாக பங்குனி மாதம்  மிருக சீரிஷ நக்ஷத்திரம், சுக்ல ஸப்தமி - வியாழக்கிழமை - கூடிய நன்னாளில்   (1595)   மூன்றாவது  புதல்வனாக அவதரித்தார்.

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருளால் பிறந்ததன் நினைவாக வேங்கடநாதன்  என்னும் திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.  


வெங்கண்ணா எனவும், அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே வேங்கடநாதரின் தந்தை பரமபதம் சேர்ந்து விட்டார். வேங்கட நாதரின் மூத்த சகோதரன் குருராஜன் தாயாரைக் கவனித்துக் கொண்டார். 

மதுரையில் வசித்த சகோதரி வெங்கடம்மாளின் கணவர் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாச்சார்யாவின் ஆதரவில் அவரது இல்லத்தில் வேங்கட நாதனின் கல்வி தொடர்ந்தது.

கல்வி நிறைவடைந்த ஒரு கட்டத்தில்,  நற்குணங்கள் நிறையப் பெற்ற சரஸ்வதி எனும் மங்கை நல்லாளை தமது மனையறத்தில் ஏற்றார்.

1614ல் வேங்கடநாதன் சரஸ்வதி திருமணம் நிகழ்ந்தது. 

வேங்கடநாதன் திருமணத்திற்குப் பின்னும் மேலும் கல்வியில் சிறந்து விளங்கிட கும்பகோணத்துக்குச் சென்றார்.

வேதாந்தம், இலக்கணம், சாஸ்திரங்கள் முதலானவற்றை  மத்வ மடாதிபதியாக விளங்கிய ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் என்ற மகானிடம் கற்றார். 

இறை வழிபாட்டிலும், இல்லறத்திலும் சேவையிலும்  ஈடுபட்ட  வேங்கட நாதன் ஆண் மகவுக்குத் தந்தையானார். ஆனாலும் கால சூழ்நிலையில் வறுமையில் வாடினார்.

தனது ஆன்மீக குருவான சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டார். அவர் நிலையை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருநாதர்.

இந்நிலையில் - 
மத்வ பீட இருக்கைக்கு,  தமக்கு அடுத்து ஒரு வாரிசைத் தேடிக் கொண்டிருந்த சுதீந்திரருடைய மனதில் - '' இதற்கான முழுத்தகுதி வேங்கடநாதனுக்கே!..'' -  எனத் தோன்றியது.  

உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இதனை வேங்கடநாதனிடம் சுதீந்திர தீர்த்தர் கூறினார்.

குடும்ப சூழ்நிலை பந்த பாசங்களினால் கட்டுண்டிருந்த வேங்கட நாதனால் - குருநாதரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

அன்புக்குரிய மனைவியையும் மகனையும் துறப்பதற்கு அவரது மனம் இடந்தர வில்லை.

குடும்ப பாரத்தினைத் தன் தோளில் கொண்டிருந்த வேங்கடநாதன் - ஏதும் சொல்லாமல் - புவனகிரிக்கே திரும்பிச் சென்றார்.

சுதீந்திர தீர்த்தருக்கு மீண்டும்  நலம் குன்றியது. இவ்வேளையில் -

இவ்வுலகம் உய்ய, துறவறத்தினை மேற்கொள்ளுமாறு இறையருளால் உந்தப்பட்டார் - வேங்கடநாதன்.

வேங்கடநாதனின் மனம் மாறியது.
குருநாதரிடம் தமது இசைவினைக் கூறினார். இதன்படி,

1621-ல் பங்குனி மாதம், சுக்ல த்விதியை கூடிய நன்னாளில் தஞ்சை மன்னரும் மந்திரிகளும் ஆன்றோர்களும் திரளாக மக்களும் கூடியிருக்க,

தஞ்சாவூரில் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் கரையில் -  
ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் எனும் திருப்பெயர் கொண்டு துறவறம் பூண்டார்.

ஸ்ரீ ராகவேந்திரருக்கு மகாபட்டாபிஷேகம் - தஞ்சை 
(Image - Thanks to - Mr.Bhargavasarma)

தன் கணவர் குடும்பத்தைத் துறந்த சேதி அறிந்து அதிர்ந்தாள் - சரஸ்வதி..

துறவறம் பூணுவதற்குள் அவரை ஒரு முறை பார்த்துவிட வேண்டுமென ஓடி வந்த சரஸ்வதி -   வழித்தடத்திலிருந்த கிணற்றினுள் தவறி விழுந்து மாண்டாள்.

இந்த விஷயம் - தன் கணவர் துறவறம் பூண்டு விட்டார் என அறிந்ததும் - சரஸ்வதி - உயிரை மாய்த்துக் கொண்டாள் என்றும் சொல்லப்படுகின்றது.

சரீரத்தினை விட்டு நீங்கிய ஆவி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மடத்திற்குச் சென்றது. 

மனைவியின் ஆவி தன்னைத் தேடிவந்து, ஆவலுடன்  தவிப்பதை உணர்ந்த ஸ்வாமிகள், அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக கமண்டல நீரைத் தெளித்தார்.

சரஸ்வதி பிறப்பு, இறப்பு நிலைகளைக் கடந்து மோட்சம் அடைந்தாள். 

ஸ்ரீமத்வ பீடாதிபதியாகப் பட்டாபிஷேகம் ஏற்று 12 ஆண்டு காலம் தஞ்சையில் வீற்றிருந்தார் ஸ்வாமிகள். 


ஒருசமயம் தஞ்சை மாநிலம் முழுவதும் மழையின்றி கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர் சேவப்பநாயக்கர் ஸ்வாமிகளைப் பணிந்து, பஞ்சம் தீர ஏதேனும் உபாயம் அருளுமாறு வேண்டினார்.

அதன்படி ஸ்வாமிகள் வருண ஜபத்துடன் யாகம்  ஒன்றை நிகழ்த்தினார். யாகம் செய்த உடனே  மழை பொழிந்து மண் குளிர்ந்தது. ஏரி குளங்கள் நிறைந்தன. இதனால் மகிழ்வெய்திய மன்னர் -

விலையுயர்ந்த ரத்தினங்கள் பதித்த அழகிய மணிமாலையை தனது அன்பின் அடையாளமாக வழங்கினார்.

அப்போது - தாம் செய்து கொண்டிருந்த யாகத்தில் அந்த மணிமாலையை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார்.

அதைக் கண்டு மன்னரின் மனம் உள்ளூர வருந்தியது. அதனை உணர்ந்தார் ஸ்வாமிகள். 

தமது திருக்கரத்தினை யாககுண்டத்துள் விட்டு மாலையைத் திரும்பவும் எடுத்து மன்னருக்கே  அளித்தார். சற்றும் மாற்றுக் குறையாமல் பொலிந்தது மணிமாலை. ஸ்வாமிகளின் திருக்கரத்தினிலோ, மாலையிலோ தீயின் சுவடு கூட இல்லை.

ஸ்வாமிகளுக்கு அக்னியும் அடிபணிவதை உணர்ந்த மன்னர் அன்று முதல் ஸ்வாமிகளின்  அடியவரானார். பின்னர் - 

தஞ்சையில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் குடந்தைக்கு மடத்தினை மாற்றிய ஸ்வாமிகள் , சில ஆண்டுகளுக்குப் பின் தீர்த்த யாத்திரை புறப்பட்டார்.

செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ஸ்வாமிகளைப் பின் தொடர்ந்தனர்.

ஸ்வாமிகள் வழங்கும் அட்சதை, பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின.

புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதோனிக்குச் சென்றார், ஸ்வாமிகள். அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அநாதைச் சிறுவன் ஒருவனின் சோகத்தினைக் கேட்டார்.

"வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக் கொள். உயர்வடைவாய்!.." என்று வாழ்த்திவிட்டு -  பயணத்தைத் தொடர்ந்தார். சிலதினங்களில்  -

அவ்வழியே வந்த ஆதோனி நவாப் சித்தி மசூத்கான் தனக்குக் கிடைத்த கடிதம் ஒன்றினை படித்துக் கூறும்படி, வெங்கண்ணாவிடம் கொடுத்தான். எழுதப் படிக்கத் தெரியாத வெங்கண்ணா -  ஸ்வாமிகளின் நல்லாசியுடன் படித்துக் காட்ட - அந்த சமஸ்தானத்தின் திவானாக உயர்ந்தார் வெங்கண்ணா.

சில காலம் கழிந்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ஸ்வாமிகள்.அவரது வருகையை அறிந்து பக்தியுடன் ஓடிவந்து பணிந்து வரவேற்ற வெங்கண்ணா - பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடம் சொன்னார்.

ஹிந்து துறவிகளின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்த நவாப் மசூத்கான் - ஸ்வாமிகளைச் சோதிக்க முனைந்தான்.

ஸ்வாமிகளைக் கெளரவிப்பதாக சொல்லிக் கொண்டு - ஒரு தாம்பாளத்தில் மாமிசத் துண்டுகளை வைத்து பட்டுத்துணியால் மூடி - காணிக்கை எனப் பொய்யுரைத்து அளித்தான் - நவாப் மசூத்கான்.


ஸ்வாமிகளும் புன்முறுவலோடு,  அதனை ஏற்றுக் கொண்டு - புனித நீரைத் தெளித்தார்.

அத்துடன் - பட்டுத்துணியினை நீக்கும்படி  சொன்னார்.

நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தாம்பாளத்தில் இருந்த மாமிசத் துண்டுகள் மலர்களாக மாறி மணம் வீசிக்கொண்டிருந்தன.

தன் செயலுக்காக மனம் வருந்திய நவாப் தன்னை மன்னிக்கும்படி வேண்டி, பொன்னும் பொருளும் காணிக்கையாக அளித்தான்.

அவற்றை நிராகரித்த ஸ்வாமிகள் - துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள மாஞ்சாலி கிராமம் மட்டும் போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக்கொண்டார்.

மாஞ்சாலி கிராமத்தின் அதிபதியான மாஞ்சாலை அம்மன் - ஸ்வாமிகளுக்குத் தரிசனம் அளித்தாள்..

அம்பிகையின் தரிசனத்தில் அகமகிழ்ந்தார் - ஸ்வாமிகள்..

மாஞ்சாலை கிராமத்தில் பிருந்தாவனப் பிரவேசம் நிகழ்த்திட அருளினாள்.

மாஞ்சாலி கிராமம் தான் - இன்றைய மந்திராலயம்.

கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த இடம் தான்  மாஞ்சாலி என்பதை உணர்ந்திருந்த ஸ்வாமிகள், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமாகத் திருவுளம் கொண்டார். 

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.


''..பிருந்தாவனத்தில் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!." - என்று அருளிய ஸ்வாமிகள், அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கு அன்புடன் செய்யும் உதவிகள் இறைவனுக்குச் செய்யும் பூஜைகளுக்கு நிகரானது - என்று அருளினார்.

தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் பொழுதினை முன்னதாகவே உரைத்தார்.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தபின், சுற்றிலும் சீடர்களும் பக்தர்களும் சூழ்ந்து  துக்கத்தில்  ஆழ்ந்திருக்க, 

விரோதிகிருது (1671) வருடம் ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமை , 

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனப் பிரவேசம் நிகழ்ந்தது.

*  *  *
ஸ்ரீ ஸ்வாமிகளின் பிருந்தாவனப் பிரவேசம் நிகழ்ந்த பின்னர்,  தஞ்சையிலும் பிருந்தாவனம் அமைக்க முற்பட்டனர். 

ஆயினும் - வடவாற்றின் கரையில் ஸ்வாமிகள் தவமிருந்த இடம் சரியாகத் தெரியாமல் தவித்த மக்கள் - ஸ்வாமிகளை நினைத்து பிரார்த்தித்தனர்.

அப்போது ஐந்தலை நாகம் ஒன்று அங்கே தோன்றி - குருநாதர் தவமிருந்த  இடத்தை மண்டலமிட்டு அடையாளம் காட்டி மறைந்தது. 

அந்தப் புனித இடத்தில்தான்  - பிருந்தாவனம்  அமைந்துள்ளது.

தஞ்சையிலுள்ள பிருந்தாவனத்தில் வியாழக்கிழமைகளில் வெகுசிறப்புடன் வழிபாடுகள் நிகழ்கின்றன.

* * *

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியின் பெல்லாரி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சர்.தாமஸ் மன்றோ.
.
அப்போது -கோயில் நிலங்களின் வருமானம் முழுவதையும் வசூலிக்குமாறும்  வாரிசுகள் இல்லையெனில் நிலங்களைக் கையகப்படுத்துமாறும் பிரிட்டிஷ் அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி பிருந்தாவனம் இருக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக -
தன் குழுவினருடன்  சென்றார் மாவட்ட ஆட்சியர் சர்.தாமஸ் மன்றோ.

இந்த நிலம் ஸ்வாமிகளுக்கு நவாப் சித்தி மசூத்கான் அளித்த காணிக்கை.

நிலத்தைக் கையகப்படுத்த வந்திருக்கும் ஆட்சியரிடம் பேசுவது அறியாது தவித்தனர் - மடாலயத்தினர்.

காலணிகளைக் கழற்றி விட்டு மடாலயத்தினுள் நுழைந்தார் தாமஸ் மன்றோ.

ஸ்ரீ பிருந்தாவனம்
ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தின் முன் நின்ற மன்றோ சற்றைக்கெல்லாம் தானாகவே பேச ஆரம்பித்து விட்டார்.

அவர் முன்பாக ஒளிவடிவாக ஸ்வாமிகள் - பிருந்தாவனத்திலிருந்து தோன்றி அருளினார்.

நிலத்தைப் பற்றிய விளக்கங்களை ஆங்கிலத்தில் அளித்தருளினார்.

அதைக் கேட்டு மன்றோ திருப்தியுற்றார்.

அன்புடன் வணக்கம் செலுத்தி விட்டுத் திரும்பினார்.

அவருடன் சென்றவர்களோ திகைத்தனர். தாமஸ் மன்றோ யாருடன் பேசிக் கொண்டிருக்கின்றார்?.. - என.

மடாலயத்திலிருந்து வெளியே வந்த மன்றோவிடமே கேட்டனர்.

அவர் சொன்னார் -

காவியுடை அணிந்திருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்..  இந்த நிலம் குறித்த அனைத்து விளக்கங்களையும் அவர் அளித்தார். எனவே - இந்த நிலம் மடாலயத்திற்கே சொந்தமானது என அறிவிக்கின்றேன்.. என்னுடன் பேசிக்கொண்டிருந்த - பெரியவரை நீங்கள் பார்க்கவில்லையா!..

மன்றோ அவர்களே.. அவர் தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்.. அவர் ஜீவசமாதி அடைந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகின்றன.. ஸ்வாமிகளைத் தரிசித்த நீங்கள் பாக்கியசாலிதான்!..

பிரமிப்பின் எல்லையிலிருந்த மன்றோ - ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தராகி நின்றார்.

சர். தாமஸ் மன்றோ
சர். தாமஸ் மன்றோ - அரசு ஆணையினை ரத்து செய்து -
நிலத்தை மடாலயத்திற்கே உடைமையாக்கிய விவரத்தினை அன்றைய ஆங்கிலேய அரசு ஆவணக் குறிப்பாகவும் வெளியிட்டுள்ளது.

விக்கிபீடியா வழங்கும் செய்தி - இதோ!..

Incident in Mantralaya

Mantralaya village in Andhra Pradesh is a place where the `Brindavan' of famous 'Dvaita' saint 'Raghavendra Swami' is located. When Sir Thomas Munro was the Collector of Bellary in 1800, the Madras Government ordered him to procure the entire income from the Math and Manthralaya village. When the Revenue officials were unable to comply with this order, Sir Thomas Munro visited the Math for investigation. He removed his hat and shoes and entered the sacred precincts. 

Sri Raghavendraswamy emerged from the Vrindavan and conversed with him for some time, about the resumption of endowment. The Saint was visible and audible only to Munro, who received Manthraksha (god's blessing). 

The Collector went back and wrote an order in favour of the Math and the village. This notification was published in the Madras Government Gazette in Chapter XI, page 213, with the caption "Manchali Adoni Taluka". This order is still preserved in Fort St. George and Manthralayam.



பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டிருக்கும் - 
குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் 

தன்னிடம் வேண்டுவோர்க்கு - 
கற்பக விருட்சத்தினைப் போல, 
காமதேனுவைப் போல - 
யாவற்றையும் தந்தருள்கின்றார்.

பூஜ்யாய ராகவேந்த்ராய 
ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய 
நமதாம் காமதேனவே:

ஸ்ரீ குருவே சரணம்!..
* * *

16 கருத்துகள்:

  1. ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய நிறைய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  2. ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் வரலாறு படிக்கையிலே
    தீர்த்தமாக பருகியதைப் போன்றதோர் உணர்வு உந்தியது.
    பக்திமிகு வெங்கண்ணா நாமம் நலம் பயக்கட்டும்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  3. மீண்டும் அவரின் வரலாற்றை படிக்க மெய்யுருகிப் போனேன் ஐயா.

    அருளாளர்....குருவாரமான இன்று அவர் பற்றி படித்து, அவரை கண்டதும், மனம் எல்லையில்லா ஆனந்தத்திற்கு போய் விட்டது ஐயா. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஸ்வாமிகளின் வரலாற்றில் - இது சிறிதளவே..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்!..

      நீக்கு
  4. மந்த்ராலயம் சென்றுள்ளேன். இந்த அளவுக்கு ராகவேந்திரர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி. நூலாக வெளியிடும் அளவு செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் தங்களது பணிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நான் மந்த்ராலயம் சென்றதில்லை..
      தஞ்சையிலுள்ள பிருந்தாவனத்தினைத் தரிசித்துள்ளேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமை... சிறப்பை அறிந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தமிழ்நாட்டில் பிறந்து தவக்கோலம் பூண்டவராயினும், புவனகிரியில் அவருக்கு உரிய பெருமை அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. அவரை கர்நாடகத்தவராகவே பார்க்கிறார்கள். (௨) ஸ்ரீ ராகவேந்திரருக்கு தஞ்சையில் மட்டுமல்ல, குவைத்திலும் பிருந்தாவனம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ..ஆம், குவைத்திலுள்ள தங்கள் நன்னெஞ்சில் அவர் பிருந்தாவனம் அமைத்து அமர்ந்திருக்கிறாரே! அம்மகானின் முழு வரலாற்றையும் சுருக்கமாகவும் சுவாரச்யத்துடனும் எழுதிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா!..

      கண்கள் கலங்குகின்றன..

      குவைத்தில் எங்கேயிருக்கின்றது பிருந்தாவனம் என்று ஆச்சர்யப்பட்ட வேளையில் -

      அடுத்த வரிகளைக் கண்டு அயர்ந்து விட்டேன்..

      ஸ்வாமிகள் வந்து அமர்வதற்கு என்மனமும் ஏற்றதொரு இடமோ!?..

      அறியேன்.. ஐயா.. அறியேன்!..

      ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தின் கீழ் -
      ஒரு சிறு துகளாகக் கிடப்பதுவே பெரும்பேறு..

      தங்களைப் போன்ற பெரியோர்கள் - சிறியேனின் பதிவுகளைக் கண்டு கருத்துரையிடுவது பெரும் மகிழ்ச்சி.. என்றென்றும் நன்றி..

      நீக்கு
  7. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வரலாறு அறியத்தந்தமைக்கு நன்றிகள், அருமை,

    பதிலளிநீக்கு
  8. aya vanakam ragavendra padathil solatha pala thagaval soli irukega vaalthukal.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்..
    தங்களிம் முதல் வருகைக்கு மகிழ்ச்சி..

    ஸ்ரீராகவேந்திரர் - பற்றிய திரைப்படத்தில் ஜனரஞ்சகத்திற்காக சில விஷயங்களைச் சேர்த்திருந்தனர்.. கால ஓட்டத்தில் மக்களும் அதை நம்பக்கூடிய நிலையில்!..

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..