நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 06, 2014

மார்கழிப் பனியில் - 22

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 22. 


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான 
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழ் 
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் 
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போல 
செங்கண் சிறுச்சிறிதே  எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல் 
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் 
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 11 - 12


மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். - 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர்  எம்பாவாய். -12

திருச்சிற்றம்பலம்

ஆலயதரிசனம்

திருவைகாவூர்.


இறைவன்  - வில்வவனேஸ்வரர்
அம்பிகை - சர்வ ஜனரட்க்ஷகி, வளைக்கை நாயகி.
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - யமதீர்த்தம்

கிழக்கு நோக்கிய திருக்கோயில்.

திருக்கோயிலினுள் நுழையும் போதே - நம்மை எதிர் கொண்டு அழைப்பது போல் - கிழக்கு நோக்கியவாறு - நந்தியம்பெருமான்.

வித்தியாசமான திருக்கோலம்.

புலிக்குப்  பயந்தோடிய வேடன் ஒருவன் -  அருகிலிருந்த  மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே படுத்துக் கொண்டது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். 

இரவில் தூக்கம்கொண்டு கீழே விழுந்து விடுவோமோ என்று அஞ்சிய வேடன் இறைவனை வேண்டியபடியே - ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை மரத்தின் கீழே குவிந்தன. 

அன்று மகா சிவராத்திரி நாள். வேடன் அவனையும் அறியாமல் - ஏறி அமர்ந்திருந்த மரம் வில்வ மரம்.

ஊன் உறக்கம் இன்றி - வில்வ இலைகளை உதிர்த்துப் போட்டு - இறைவனை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் அளித்தார். 

வேடன் தன் மனையாளுடன் சிவலோகம் சென்றடைந்தான்.

இதற்கிடையில் - அன்று அதிகாலையில் வேடனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமதர்மன் அங்கு வந்தான்.

சந்நிதானத்தில் நுழைந்த யமனை  -  திருக்கரத்தில் தண்டம் ஏந்தி விரட்டினார் - சிவபெருமான்.

சிவ சந்நிதானத்தில் நுழைந்த யமனைத் தடுக்காததால் -   நந்தியம் பெருமான் மீது இறைவன் கோபம் கொள்ள  - தனது மூச்சுக் காற்றினால் - யமனைக் கட்டிப் போட்டார்.


கட்டுண்டு கிடந்த  யமனைக் கண்டு இரக்கம் கொண்ட பெருமான் -அவனைக் கருணையுடன் விடுவித்தார். சிவபெருமானை வலம் வந்து வணங்கிய யமன் -

சிவ.. சிவ.. என்று நினைத்தாலே - போதும்!. அவர்கள் இருக்கும் பக்கமே நெருங்க மாட்டேன். இது சத்தியம்!.. - என்றான்.

சொன்னதோடு மட்டுமல்லாமல்,  அங்கேயே தீர்த்தத்தை உருவாக்கி  -   நீர் வார்த்துக் கொடுத்தான். 

அதனாலே தான் - இன்றளவும் இந்தப் புண்ணியம் நிகழ்ந்த திருத்தலமாகிய திருவைகாவூரில் -

நந்தியம்பெருமான் - கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார். அவருக்கு எதிரில்  - யமன் உருவாக்கிய யமதீர்த்தம்.

அந்த யம தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தொழ வருபவர்களிடம்,

நாமென்ன - விசாரணை செய்ய வேண்டியிருக்கின்றது என்று -  நவக்கிரக அதிபதிகளும் விலகிப் போய் விட்டனர்.

எனவே  - திருவைகாவூர் கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை.

பெருமானைக் காண வரும் அன்பர்களைக் காப்பதற்காக - மஹாவிஷ்ணுவும்  நான்முகனும் - சந்நிதியின் இருபுறமும் குடிகொண்டதால் - துவார பாலகர்களும் இல்லை!..

அம்பாள் - அருள் மிகும்  சர்வ ஜனரட்க்ஷகி. 

ஈசனின் இடப்புறம் - கிழக்கு நோக்கியவளாகத் திருக்கோலங் கொண்டு விளங்குகின்றனள்.


சப்த கன்னியரும் அகத்தியர் மாமுனிவரும் வழிபட்ட திருத்தலம்.  வேதங்கள்  வில்வ மரமாகி விளங்குவதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி வழிபட்ட திருத்தலம்.

அருணகிரி நாதரும் திருப்புகழ் பாடி - இத் திருத்தலத்தில்,  திருமுருகனை வழிபட்டிருக்கின்றனர்.

வள்ளியும்  தெய்வயானையும் உடனுறைய  - வடிவேலன் - வண்ண மயிலின் மேல் அமர்ந்த திருக்கோலம்.

வடிவேலன் வீற்றிருக்கும் மயில் வடக்கு நோக்கியிருக்கின்றது. இது ஒரு அபூர்வ அம்சமாகும்.


மகாசிவராத்திரி அன்று விடியற்காலையில் - வேடன், சிவலோகம் பெற்றதை நினைவுபடுத்தும் முகமாக -

மூலஸ்தானத்தில் சிவபெருமானுக்கு முதலிலும் வேடனுக்கு அடுத்தும் தீப ஆராதனை நிகழும்.

பின்னர் - கோபுர தரிசனமாக - பஞ்ச மூர்த்திகள்  எழுந்தருள்வர். வேடனும் தன் மனைவியுடன் எழுந்தருள வீதியுலா நிகழும்.

மதியம் தீர்த்தவாரி. இரவு ஓலைச் சப்பரத்தில் இறைவனும் அம்பிகையும் திருவீதியுலா எழுந்தருள்வர்.


ஆயிரக் கணக்கில் அன்பர்கள் வந்து வணங்க - மஹாசிவராத்திரி - வேத, திருமுறை பாராயணங்களுடன் கோலாகலமாக நிகழும்.

திருவைகாவூர் - அழகிய கிராமம். கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன.

சுவாமிமலை, ஆதனூர், புள்ளபூதங்குடி - அடுத்ததாக  - திருவைகாவூர்.

மகாசிவராத்திரி வழிபாட்டிற்கு உகந்த திருத்தலம் -  திருவைகாவூர்.

வலம் செய்து வணங்கி வளமும் நலமும் பெற்று வாழ்வோம்!..

வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து விதியாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செய் ஒருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவி மணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே (3/71)
திருஞானசம்பந்தர்.

சிவாய திருச்சிற்றம்பலம்

6 கருத்துகள்:

  1. அருமையான பாசுரம். சிறப்பான கோவில்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் திரு.. வெங்கட்..
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. ஆஹா, வழக்கம்போல மூன்று பகுதிகளுமே சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. இறைவன் - வில்வவனேஸ்வரர்
    அம்பிகை - சர்வ ஜனரட்க்ஷகி, வளைக்கை நாயகி.
    அருள்பொழியும் அருமையான திருத்தலம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. அன்புடையீர்..
    தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..