நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 27, 2012

அண்ணாமலை

திருஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருஅண்ணாமலைத் திருப்பதிகத்திலிருந்து சில பாடல்கள்...

பூவார்மலர்கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

அடியவர்கள் நறுமணமுடைய மலர்களை திருவடிகளில் தூவி வணங்கி வழிபடுகின்றனர். அதைக் கண்ணுற்ற வானவர்களும் புகழ்ந்து போற்றித் தொழுகின்றனர். யாருடைய  திருவடிகளில் ?.....

அழிவில்லாத வரத்தைப் பெற்று விட்டோம் என்று இறுமாந்து எல்லாருக்கும் இன்னல்களையும் இடையூறுகளையும் செய்து கொண்டிருந்த மூன்று அசுரர்களின் ஆணவத்தையும் அழித்து அவர்தம் முப்புரங்களையும் எரித்து ஒழித்ததோடல்லாமல் அவர்கள்  மூவர்க்கும் - யாரும் எதிர்பார்க்காதபடி - நல்லருளையும் வாரி வழங்கிய வள்ளல் பெருமானாகிய அண்ணாமலையார் தம் திருவடித் தாமரைகளில்!....

நீருண்ட கார் மேகங்கள் வானத்தில் கூடுகின்றன. சாரலாய்த் தூவி மழை பொழியத் துவங்குகின்றது. திடீரென எட்டுத் திசையும் அதிரும் வண்ணம் இடி முழக்கம். அடர்ந்த கானகத்தில் கூட்டங்கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த  ஆடுகளும் காட்டுப்பசுக்களும் இடியோசையைக் கேட்டு அதிர்ந்து அச்சத்துடன் வரிசையாய் ஓடி வந்து,  மந்தையாய் ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய அண்ணாமலையின் அண்ணலே!...  

அண்ணாமலையாரே!...

எங்கள் வாழ்வும் இப்படித்தான்!.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியுமாய் ...சிந்தை தடுமாறுகின்றோம்..
இடியோசையைக் கேட்டு  நடுங்கி அதிர்ந்து - அச்சத்துடன் ஓடி வந்த அந்த ஆடுகளுக்கும் காட்டுப் பசுக்களுக்கும் ஆதரவு  அளித்த அண்ணாமலையின் அடிவாரம் எங்களுக்கும்  அடைக்கலம் தாராதா?.....
 
அண்ணாமலையாரே!...எம்மையும் காத்தருள்வீராக!.....


கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை என்பர். ஆனால் திருக்கார்த்திகை திருநாளில் திருஅண்ணாமலையை வலம் வந்து தரிசிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. 

அதனால்தான், திருஞானசம்பந்தப்பெருமான் நம் குறை தீரும் வழியை நமக்குக் காட்டுகின்றார்...



எனைத்தோரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர்  உறைகோயில்
கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழல் ஊத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணா மலையாரே.



மலைச்சாரலில் மேய்க்கச் சென்றான் ஆயன் தன்னுடைய எருமைகளை.... நேரமாயிற்று....

கனைத்துக் கொண்டும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும் அங்குமிங்கும் மேய்ந்து திரிந்த அவை மேய்ச்சலில்  சற்றே தொலைவுக்குப் போய் விட்டன. தன்  எருமைகளைக் காணாத ஆயன் திடுக்கிட்டவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத,     

அவ்வளவுதான்... குழல் ஒலியை கேட்ட அளவில் அனைத்து எருமைகளும் வீடு திரும்பும் விருப்பத்துடன் ''திடு...திடு...'' என ஓடி வந்து ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய அண்ணாமலையில் வீற்றிருக்கும்  எம்பெருமானே!......

ஊழிகள் தோறும்  - அன்பில் நிறைந்த அடியவர்கள்  துதித்து மகிழும்படி, ஜோதி வடிவாய்த் திகழும்  அண்ணாமலையாரே!...    

கண் இமையாத வானவர்களுக்குத் தலைவனாய் விளங்கும் எம்பெருமானே!... 

நினைத்துத் தொழும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனே!..  

அருட்பெரும் ஜோதியாய் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! உம்மையன்றி எமக்கு வேறு புகலிடம் ஏது?...

அண்ணாமலையாரே!.....சரணம்!... சரணம்!...

2 கருத்துகள்:

  1. நல்ல பாடல் விளக்கம், அருமையா எளிமையா ம்ம் விளக்கம் அருமையாக இருக்கு,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..